இரண்டு வாரங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் சென்று ஆலய தரிசனம் பெற்று திரும்பியிருந்தேன். அங்குள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களைப் பற்றி புகைப்படங்களுடன் தங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில், பழமை வாய்ந்த ஏகம்பரநாதர் கோயிலை பற்றி இங்கு எழுதுகிறேன். இந்தக் கோயில் 3500 வருட கால வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள கோயில் கோபுரம் 192 அடி உயரமாக அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். இது தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கோபுரமாக போற்றப்படுகிறது.
கோயில் கோபுரம்
கோபுரத்திற்கு ஈடு கொடுக்கும் கதவு.

கோயிலினுள்ளே...
வரலாறு:
இந்தக் கோயிலின் வரலாறு மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. சுமார், 3500 வருடங்களுக்கு முன்னர் சிவபெருமான் கைலாசத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது, பார்வதி தேவி சற்று விளையாட்டிற்காக பரமசிவனின் கண்களை மூடியுள்ளார். இதனால் கோபமுற்ற சிவன், பார்வதியை தண்டனை அடையச் செய்ய பூலோகத்திற்கு அனுப்பினார்.
பூமிக்கு வந்த பார்வதி, ஒரு நதிக்கரையில், மாமரத்தடியில் ஈர மன்னால் சிவலிங்கத்தை உருவாக்கி வணங்கி வந்தார். பார்வதியின் பக்தியை சோதிக்க, சிவன் பலத்த மழையையும் காற்றையும் பூமியில் வீசச் செய்தார். இதிலிருந்து லிங்கத்தை காப்பதற்கு, பார்வதி பெரிதும் போராடியுள்ளார்.
இறுதியில், பார்வதி முன்பு சிவன் தோன்றி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். இப்பொழுது இருக்கும் ஏகம்பரநாதர் கோயில், அந்த இடத்திலேயே கட்டப் பெற்றுள்ளது.
இக்கோயிலுக்குள்ளே, பார்வதி எந்த மாமரத்தடியில் சிவலிங்கத்தை வணங்கி வந்தாரோ, அந்த மரம் சென்ற ஆண்டுவரை இங்கு இருந்து வந்துள்ளது. ஆனால், இப்பொழுது அந்த மரத்தின் கண்றையே பார்க்க முடிகிறது.
அந்த மரம் பல சிறப்புகளை வாய்த்து வந்துள்ளது. அந்த மரத்தில் நான்கு கிளைகள் உண்டு என்றும், ஒவ்வோர் கிளையில் உள்ள மாம்பழங்களும் ஒவ்வோர் சுவை உடையதென்றும் கூறப்படுகிறது. இதில் காய்க்கும் பழத்தை உண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
பார்வதி எந்த நதிக்கரையில் அமர்ந்து சிவபெருமானை வணங்கி வந்தாரோ, அந்த நதி தற்பொழுது சிறு குளமாகவே காட்சியளிக்கிறது.